மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதித்து, அவதூறு பரப்பும் வகையில், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி டிக் டாக் கணக்கு குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
“சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில்" என்ற பெயரில் இயங்கி வந்த அந்தப் போலி கணக்கை ஜோகூர் அரச ஊடக அலுவலகம் கண்டறிந்து புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைப் பிரிவு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை CID இயக்குநர் டத்தோ எம். குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இக்குற்றம் தொடர்பாக 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் 1998 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3R என்ற இனம், மதம் மற்றும் அரச குடும்பம் சார்ந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீஸ் துறை எச்சரித்துள்ளது.








