மலாய்க்காரர்களின் ஒற்றுமை என்பது நாட்டில் உள்ள பிற இனத்தவரை எதிர்ப்பதற்கான முயற்சியாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது என்று மேன்மை தாங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.
இன்று வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஹரிராயா ஹாஜி வாழ்த்துச் செய்தியில், அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஒற்றுமை இல்லாத பட்சத்தில் பலவீனம் அடைந்து நாமே நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்றும், சமீபகாலமாக அரசியல்வாதிகளிடையே நிலவும் பூசல்கள் மக்களிடையே கவலையை ஏற்படுத்துவதாகவும் சுல்தான் சுட்டிக்காட்டினார்.
அரசியல் மற்றும் சமூக வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து மதத்தினரும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அமைதியுடன் வாழ வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் அரசியார், தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின் ஆகியோர் கேட்டுக்கொண்டதுடன் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.








