காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் பரவி வரும் கொடிய எபோலா வைரஸ் நோய் தொற்று தொடர்பில் அறிக்கை விடுத்துள்ள மலேசிய சுகாதார அமைச்சு, மலேசியாவில் இதுவரை எந்த பாதிப்பும் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக துபாய், தோஹா மற்றும் சிங்கப்பூர் வழியாக மலேசியா வரும் பயணிகளும் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காங்கோ மற்றும் உகாண்டாவிலிருந்து மலேசியாவுக்கு நேரடி விமான சேவைகள் தற்போது இல்லை என்றும் சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றின் “பரவல் வேகமும், அதன் தீவிர அளவும்” குறித்து உலக சுகாதார அமைப்பான WHO கவலை தெரிவித்துள்ளது.
இந்த கொடிய தொற்றுநோயால் இதுவரை சுமார் 131 பேர் உயிரிழந்துள்ளதாக WHO அறிவித்துள்ளது.








