கோல திரங்காணு பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த கொடூர சாலை விபத்தில், 18 வயது இளைஞரின் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் சுமார் 3.36 மணியளவில் நிசான் வெனெட் இரக சிறிய வேனும் வோக்ஸ்வாகன் கோல்ஃப் ஜிடிஐ காரும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கோல திரங்காணு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்துள்ளார்.
ஐந்து பேர் கொண்ட குடும்பம் பயணித்த வோக்ஸ்வாகன் இரக காரானது, கோல திரங்காணு நகர மையத்திலிருந்து லோசோங் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், அந்தக் கார் எதிர்புற சாலையில் புகுந்து பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை ஓட்டிச் சென்ற சிறிய வேனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் தாக்கத்தில் மின்கம்பம் சரிந்து வேனை ஊடுருவி, இளைஞரின் தலையை துண்டாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்தவர் வா ஹான் கியோங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அஸ்லி நூர் குறிப்பிட்டுள்ளார்.








