புடி95 மானியத் திட்டம் தொடர்பாக டிக்டாக்கில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றத்திற்காக, தனியார் வாகன ஓட்டுநர் மற்றும் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் ஆகிய இருவருக்கு, சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று தலா 4,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
29 வயதான முகமது ஐமான் சைனி சத்தார், 46, ரோம்ஃபாஸ்லி ஷாம் முகமது மொக்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள், மிகவும் கடுமையானது என்றும், இது பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கேடு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிபதி அகமது ஃபுவாட் ஒத்மான் எச்சரித்துள்ளார்.
குற்றச்சாட்டின்படி, அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, பொதுமக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், டிக்டாக்கில் பொய்யான பதிவொன்றை உருவாக்கி, அதனை தெரிந்தே பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர்கள் மீது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) 1998 இன் பிரிவு 233(1)(a)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.








