இஸ்ரேலியப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களில் அடங்கியுள்ள 25 மலேசியர்களின் நிலை குறித்து, கடந்த 48 மணி நேரங்களாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என தி சுமூத் நுசாந்தாரா கட்டுப்பாட்டு மையம் (எஸ்என்சிசி) தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று சிப்பாங்-இல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்என்சிசி தலைமை இயக்குநர் டத்தோ சானி அராபி அப்துல் அலிம், அவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது கடுமையான முறையில் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், அஷ்டோத் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 48 மணி நேரங்கள் கடந்தும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை என்றால், இது உலக நாடுகள் கவனம் செலுத்தி தலையிட வேண்டிய ஒரு சம்பவமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக வெளியான தகவல்களில், துருக்கியின் மர்மாரிஸ் துறைமுகத்திலிருந்து காசாவை நோக்கி 54 கப்பல்கள் புறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மனிதாபிமானப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், செயல்பாட்டு பகுதியில் நிலவும் பாதுகாப்பு அபாய மதிப்பீட்டின் அடிப்படையில், மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டல எல்லைகளும் புதுப்பிக்கப்பட்டதாக எஸ்என்சிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிறை பிடிக்கப்பட்டவர்கள் அஷ்டோத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, "சிறைக் கப்பலில்" வைக்கப்பட்டிக்கலாம் என நம்பப்படுவதாக சானி அராபி தெரிவித்துள்ளார்.








