May 21, 2026
Thisaigal NewsYouTube
தவறான செய்தி வேண்டாம்: டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

தவறான செய்தி வேண்டாம்: டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்து

Share:

2024 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூசத் திருவிழா தொடர்பாக “தங்கமும் வெள்ளியும் மீண்டும் மோதுகின்றன” என்ற தலைப்பில் ஆங்கில நாளேடு ஒன்றில் இன்று வெளியிடப்பட்ட தவறான செய்தி குறித்து பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும், மேலவை உறுப்பினருமான செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.

இதுபோன்ற தலைப்பில் வெளியான செய்தி, நாட்டில் நமது இந்து மக்களிடையே நல்லிணக்கயின்மையை ஏற்படுத்துவதாக உள்ளது. இத்தகைய அர்த்தமற்ற குற்றச்சாட்டை தாம் வன்மையாக மறுப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலத்தில் இந்து மக்களிடையே நாம் எப்போதுமே ஒற்றுமையை முன்நிறுத்தியே பாடுபட்டு வருகிறோம். வரக்கூடிய ஆண்டுகளிலும் இத்தகைய ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் அறங்காவலருக்கும் இடையே பரஸ்பர உறவு மிக நன்றாக இருக்கிறது.

எனவே உண்மைக்கு புறம்பான தவறான செய்தியை அல்லது அறிக்கையை வெளியிட வேண்டாம். மதங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வதந்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்துமாறும் அனைவரையும் தாம் கேட்டுக்கொள்வதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

இது போன்ற பொறுப்பற்ற மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவது மற்றும் பகிரப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதன் தொடர்பில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும், ஜெலுத்தோங் எம்.பியுமான RSN ராயர், பினாங்கு நாட்டுக்கோட்டை செட்டியார் கோயில் அறங்காவலருடன் இணைந்து கூடிய விரைவில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு, நடப்பு நிலை குறித்து விளக்கம் அளிப்பார் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

Related News