வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், மலேசிய பன்னாட்டு கடப்பிதழ்கள் தற்போதுள்ள 49 பாதுகாப்பு அம்சங்களிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரிக்கப்பட்டு, 94 நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளியிடப்படவுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
ஹாலோகிராம், யுவி கதிர்கள், தடயவியல் தொழில்நுட்பம் போன்ற உயர்தர பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த புதிய கடப்பிதழ்கள், முதற்கட்டமாகப் புத்ராஜெயா, கோலாலம்பூர், ஷா ஆலாம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு அலுவலகங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் ஜூலை இறுதிக்குள் நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார் . தற்போதுள்ள கடப்பிதழ்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் வரை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதால், பொதுமக்கள் புதிய கடப்பிதழுக்கு மாற அலுவலகங்களில் தேவையற்ற நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.








