பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பிய குற்றத்திற்காக, பெண் ஒருவருக்கு சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று 4000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
தன் மீதான குற்றச்சாட்டை அப்பெண் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதையடுத்து, நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நூர் இர்சலினா உமர் குமார் என்ற அப்பெண், கடந்த மார்ச் 31 -ஆம் தேதி, தனது Threads கணக்கில், டிவி3-இன் அதிகாரப்பூர்வ செய்தி வடிவத்தைப் போல மாற்றியமைக்கப்பட்ட பதிவை பதிவேற்றியதாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்பான அந்த போலித் தகவல் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவது, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








