சபா மாநிலத்தில், பினங்கா வனக் கட்டுப்பாட்டுப் பகுதியில், தலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தந்தங்களுக்காக அந்த யானை கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சபா மாநில வனவிலங்குத் துறை இயக்குநர் முகமட் சோஃபியான் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த யானையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், அந்த யானையின் உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை மற்றும் சேறு காரணமாக, தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு உடனடியாக செல்ல முடியவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியை தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள அதிகாரிகள், யானையின் மீதமுள்ள தலைப்பகுதியை வைத்து சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.








